பேஸ்புக் காதலிக்காக விகாராதிபதியை கொன்ற இளம் பிக்கு: விகாராதிபதி கொலையில் நடந்தது என்ன?

கொழும்பு, செப். 17: சீதுவை வெத்தேவ ஸ்ரீ நந்தராமய விகாராதிபதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளம் பிக்குவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சீதுவை வெத்தேவ ஸ்ரீ நந்தராமய விகாராதிபதி நெத கமுவே மகாநாம தேரர் கொலை தொடர்பாக, அந்த விகாரையில் தங்கியிருந்த 19 வயதுடைய சிவரதாரிய ஏகல சுமணசிறி தேரர், துபாய்க்கு தப்பிச் செல்ல முற்பட்டபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், துபாயில் உள்ள காதலியின் ஆலோசனைக்கு அமையவே இந்த கொலையை இளம் பிக்கு செய்துள்ளது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விகாராதிபதியை கொல்ல 3 மாதங்களாக திட்டமிட்டிருந்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொலிஸார் கூறுகையில் “மினுவாங்கொட ஹீனாட்டியான பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான யுவதியொருவருடன் இளம் பிக்குவிற்கு பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. ஆனால், அந்த பேஸ்புக் காதலியை இளம் பிக்கு ஒருமுறை கூட நேரில் சந்தித்திருக்கவில்லை.

இந்நிலையில், விகாராதிபதியின் சொத்துக்கள் தொடர்பாக பேஸ்புக் காதலியிடம் இளம் பிக்கு தெரிவித்துள்ளார். அந்த தகவல்களை துபாயில் தன்னுடன் தொடர்பில் இருந்த வீட்டு உரிமையாளருக்கு அந்த யுவதி தெரிவித்துள்ளார். சொத்துக்களை கொள்ளையடித்து, துபாய்க்கு கொண்டுவர யுவதியும், வீட்டு உரிமையாளரும்  திட்டமிட்டுள்ளனர்.

விகாரபதியை கொலை செய்து, வாகனங்களை விற்று விட்டு துபாய் வருமாறு பேஸ்புக் காதலி இளம் பிக்குவுக்கு ஆலோசனை கூறியுள்ளார். இதற்கு, தனது பெற்றோரின் உதவியையும் அந்த பெண் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து, விகாராதிபதியை கொல்வதற்காக கடந்த 12ஆம் திகதி மதியம் காதலியின் தாயும் தந்தையும் விகாரைக்கு வந்துள்ளனர்.

விகாராதிபதியின் அறைக்குள் புகுந்த இளம் பிக்குவும், அவரது பேஸ்புக் காதலியின் பெற்றோரும், விகாராதிபதியை தாக்கியுள்ளனர். காதலியின் தாயும் தந்தையும் விகாராதிபதியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
.
விகாராதிபதியின் சடலம் விகாரையில் இருந்த நிலையிலேயே, இரண்டு வாகனங்களையும் இளம் பிக்கு விற்பனை செய்துள்ளார். விகாராபதியிடம் இருந்த பணம் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக் கொண்டு, துபாயிலுள்ள காதலியிடம் செல்ல முற்பட்ட போதே இளம் பிக்கு சிக்கினார்.

டிபெண்டர் ஜீப் ஒரு கோடியே முப்பத்தைந்து இலட்சத்திற்கும் வேகன்ஆர் 65 இலட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. டிபென்டரை வாங்கிய நபர் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபாவுக்கு காரை வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றார் அவர்.

விகாரை வளாகத்திற்குள் துர்நாற்றம் வீசியதையடுத்து, கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட தேடுதலில், விகாராதிபதியின் அறைக்குள் விகாராதிபதி சடலமாக காணப்பட்டிருந்தார். அவரது முகம், கைகட்டப்பட்டிருந்தது. முகத்தில் மிளகாய்த்தூள் தூவப்பட்டிருந்தது

இந்நிலையில், கொலைத் திட்டம் துபாயில் உள்ள தனது காதலியால் தயாரிக்கப்பட்டது என்று விசாரணையில் இளம் பிக்கு கூறியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், பேஸ்புக் காதலி, காதலியுடன் தொடர்புடைய வீட்டு உரிமையாளரை கைது செய்ய, சர்வதேச பொலிசாரின் உதவி நாடப்பட்டுள்ளது என இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *