ஐ.நா.வில் தமிழர்கள் நீதிக்கு பொதுவாக்கெடுப்பு வேண்டும் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 51ஆவது கூட்டத்தொடரில் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெறவும் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு நீதிகோரியும் சர்வதேச கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

கூட்டத்தொடரின் ஐந்தாம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீண்டும் நிகழாத உத்தரவாதங்கள் தொடர்பிலான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அறிக்கை தொடர்பான கருத்தாடல் இடம்பெற்றது.

இதன்போதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரகளுக்கான அமைச்சர் மகிந்தன் சிவசுப்ரமணியம் காணொலி வாயிலாக கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:

தமிழர்கள் மீது இலங்கைத் தீவில் பெரும் அட்டூழியங்கள் நிகழ்ந்துள்ளன. இதுகுறித்த ஐ.நாவின் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீண்டும் நிகழாத உத்தரவாதங்கள் தொடர்பிலான சிறப்பு அறிக்கையாளரது அறிக்கை மிகவும் முக்கியமானது.

ஐ.நாவின் உள்ளாய்வு அறிக்கையின்படி, இலங்கையின் போரின் இறுதி ஆறு மாதங்களில் சுமார் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சிறிலங்காவின் சூழலை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு பரிந்துரைத்து அழைப்பு விடுத்திருந்தார்.

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைக்கப்படாவிட்டால், தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் எந்தத் தயக்கமுமின்றி தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் மனித உரிமைமீறல்களுக்கு பொறுப்பேற்ற வேண்டிய தேவை இல்லை என்ற நிலை உருவாகும்.

எனவே நடைபெற்று வரும் ஐ.நா கூட்டத் தொடரில் தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமை நிலைநாட்டப்பட வேண்டும்.

நீண்டகாலமாக நீடித்து வரும் இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வை வலியுறுத்தியும் தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு நீதிகோரியும் சர்வதேசத்தின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *