ஆளுந்தரப்பினர் விரைவில் என்னுடன் இணைவர்! – குமார வெல்கம உறுதி

பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர், ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் உள்ளடங்களாக 20 பேர் இம்மாத இறுதிக்குள் என்னுடன் ஒன்றிணைவார்கள்.

அறிவார்ந்த மக்கள் இனியொரு போதும் ராஜபக்ஷர்களிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கமாட்டார்கள் என புதிய லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் குமார வெல்கம தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அனைவரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களாவர்.

சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தனது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக 2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் தேசிய அரசாங்கம் என்ற கூட்டணியில் ஒன்றிணைந்தால் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வெளியேறி பொதுஜன பெரமுன கட்சியை உருவாக்கி ஒன்றிணைந்தார்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கும், சுதந்திர கட்சியின் கொள்கைக்கும் இடையில் பாரிய வேறுப்பாடு இருந்த காரணத்தினாலும், கோட்டபய ராஜபக்ஷவை 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாலும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினராக நான் அங்கத்தும் ஏற்கவில்லை.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் நாட்டு மக்கள் இரண்டரை வருட காலத்திற்குள் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி பெரும்பாலானோர் தற்போது பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுகிறார்கள்.

சுயாதீன தரப்பினர், ஆளும் தரப்பினர் உட்பட 20 பேர் இந்த மாதம் இறுதிக்குள் புதிய லங்கா சுதந்திர கட்சியில் ஒன்றிணைவார்கள். மைத்திரிபால சிறிசேனவினால் பிளவுப்படுத்தப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை நிச்சயம் ஒன்றிணைப்பேன். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆலோசனைக்கமைய அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் திறமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உண்டு என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சிறந்த முறையில் செயற்பட பொதுஜன பெரமுனவினர் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள், ஆகவே எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்கு பிறகு ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து தனக்கான அரசாங்கத்தை தெரிவு செய்துகொள்ள வேண்டும்.

ராஜபக்ஷர்களின் நிர்வாகம் எத்தன்மையானது என்பதை நாட்டு மக்கள் அனுபவ ரீதியில் தற்போது விளங்கிக்கொண்டுள்ளார்கள். அறிவார்ந்தவர்கள் இனியொருபோதும் ராஜபக்ஷர்களிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கமாட்டார்கள்.- என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *