மன்னார்,செப் 18
மன்னார், முசலிப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு கடல்பாசி மற்றும் கொடுவா மீன் உற்பத்தியை மேற்கொள்வதற்கான இரண்டாம் கட்ட ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்வு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முசலிப் பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது.
ஏற்கனவே முசலிப் பிரதேசதனதினை சேர்ந்த 27 பயனாளர்களுக்கு கடல்பாசி செய்கைக்காகவும், 6 பேருக்கு கொடுவா மீன் வளர்ப்பதற்குமான முதற் கட்ட ஊக்குவிப்புத் தொகை சில மாதங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்ட ஊக்குவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
நீர்வேளாண்மை சார்ந்த பாசி, கொடுவா மீன் வளர்ப்பு, கடலட்டை மற்றும் பண்ணை முறையிலான கடலுணவு வளர்ப்பு போன்றவற்றை விருத்தி செய்வதன் மூலம், கடற்றொழிலை ஜீவனோபாயமாகக் கொண்ட மக்களிற்கு மேலதிக வாழ்வாதாரத்தினை ஏற்படுபடுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டத்திற்கு அமைய, நாடளாவிய ரீதியில் இந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், பாசி வளர்ப்பை மேற்கொள்கின்றவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், கொடுவா மீன் வளர்ப்பிற்காக தலா 250,000.00 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுதவிர,
கொக்குப்படையான் கடற்றொழில் இறங்குதுறையில் காணப்படும் தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
குறித்த இறங்குதுறைக்கு கடற்றொழில் அமைச்சர் இன்று கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அங்கு கூடியிருந்த கடற்றொழிலாளர்கள், கடலரிப்பை தடுப்பதற்கான கல்லணை ஒன்றினை அமைத்து தருமாறும், கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக வாடி அமைப்பதற்கான காணியை ஒதுக்குதல் உட்பட்ட பல்வேறு கோரிக்கைளை முன்வைத்தனர்.
இவற்றுள் உடனடியாக தீர்வு காணக்கூடிய விடயங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
