
சிறிலங்காவுக்கான கடன் வழங்குநர்களுடன் நடத்தப்படும் கடன் மறுசீரமைப்பு பேச்சில் ஜப்பான் முன்னணி பங்கை வகிக்கத் தயாராக இருக்கிறது என ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் நேற்று ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியை டோக்கியோவில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி வரவேற்றார்.
அத்துடன் சிறிலங்காவின் கடன் மறுசீரமைப்பு பேச்சில் ஜப்பான் முன்னணி பங்கை வகிக்கத் தயாராக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
சிறிலங்காவின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் ஜப்பான் முதலீடு செய்யவேண்டும் என்பதில் சிறிலங்கா ஆர்வம் காட்டுகிறது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் முதலீடு செய்வதில் ஜப்பான் அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகளை மேற்கொள்வது குறித்து ஆராயும் எனவும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி தெரிவித்தார்.