நினைவேந்தலைக் குழப்பியது மணி அணியும், ஜனநாயக போராளிக் கட்சியுமே! – சுகாஷ் காட்டம்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலைக் குழப்பியது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வித்தியாசமானது. ஏனைய நினைவேந்தல் போன்று அல்ல. சர்வதேசம் வரை அவரின் கோரிக்கை சென்றது. இதில் இந்தியாவின் பங்கு அதிமாக உள்ளது. அழுது புலம்புவது மட்டும் நினைவேந்தல் அல்ல. திலீபனின் நினைவேந்தலில் அவரின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அரசியல் தீர்வுகள் பேசப்பட வேண்டும். அவரின் கொள்கைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில் நடக்கும் சதிக்கும்பல் இதனை தடுக்கிறது. மாவீரர் நாள் அன்று, தலைவர் கூட அரசியல் பேசுவார். ஏன் என்றால் நினைவேந்தல் வெறும் அழுது புலம்பும் நிகழ்வு இல்லை. எமது அபிலாஷைகளை நாம் அங்கே பேச வேண்டும்.

நாம் மட்டுமே அன்று இராணுவ அடக்கு முறைகளுக்கு மத்தியில் நினைவேந்தலை ஆரம்பித்தோம். இப்போது பலர் புதிதாக நுழைந்துள்ளனர்.

ஈ.பி.டி.பி மணிவண்ணன், இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் ஆடுபவர்கள், அரச புலனாய்வாளர்களின் ஒட்டுக்குழுவான ஜனநாயக போராளிக் கட்சி ஆகியோர் புதிதாக முளைத்துள்ளனர்.

ஆகவே நாம் நிகழ்வை குழப்பவில்லை. அதற்கான ஆதாரம் எம்மிடம் உள்ளது. அதனை நாம் வெளியிடுவோம். காவடியில் வந்தவர்கள் தான் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள்.

காலை 10.48 மணிக்கு நினைவுச் சுடர் ஏற்ற வேண்டும். 10.46 மணிக்கு காவடி குழு குழப்ப ஆரம்பித்தது. அதன் பின்னர் மறவன் புலவு பிரபாகரன், வாட்ஸ் ஆப் குழுவில் நிகழ்வை குழப்புவது தொடர்பில் குரல் பதிவை அனுப்பியுள்ளார். அதற்கான ஆதாரத்தை இங்கே காட்டுகின்றேன்.

பொதுச் சுடரை நாம் தட்டி விடவில்லை. ஈ.பி.டி.பி இன் மணிவண்ணன், ஜனநாயக போராளி கட்சியுடன் இந்த துரோகத்தை செய்துள்ளனர். இந்த விடயங்களை பல ஊடகங்கள் மறைத்துள்ளன.

இதனால் காயமடைந்து எமது உறுப்பினர் 24ம் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாம் இப்போதும் பொறுமையாக இருக்கின்றோம். நாம் திருப்பி அடிக்கவில்லை. ஏனென்றால் தியாக தீபம் திலீபனின் அஹிம்சை வழியில் செல்கின்றோம்.

பொது கட்டமைப்பு ஊடாக நிகழ்வு நடக்கிறது என்று சொன்னார்கள். ஆனால் மணி அணியினர் ஒரு அரசியல் கட்சி. நினைவேந்தல் வாரம் ஆரம்பித்து 3 நாட்களின் பின்னர் இந்தக் குழு அமைப்படுகிறது. வெளிநாட்டு சதிகளின் ஆதரவில் இந்தக் குழு அமைக்கப்படுகிறது. அதற்கு சில ஊடகங்களுக்கும் துணை நிற்கிறது. 13 ஆம் திருத்தத்தை ஏற்க வேண்டும் என்ற நோக்கிலேயே அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள்.

இது தான் நேற்று நினைவேந்தலில் இடம்பெற்றது. அதற்கான வீடியோ ஆதாரங்களையும் உங்களிடம் காண்பித்துள்ளேன். யார் என்ன சொன்னாலும் மக்களுக்கு புரியும் வரை நாம் அரசியல் பேசுவோம், இது திலீபன் மீது ஆணை.- என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *