
தங்கத்தின் விலை தற்போது படிப்படியாகக் குறைவடைந்துள்ளது என்று தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மாதத்தின் முதல் பகுதியில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு லட்சத்து 73 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதற்கமைய இந்த மாதத்தின் 27 நாட்களுக்குள் 24 கரட் தங்கம் 8 ஆயிரத்து 500 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
இதேவேளை இந்த மாத முதற்பகுதியில் 22 கரட் தங்கம் ஒரு பவுண், ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 22 கரட் தங்கம் ஒரு பவுண், ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதற்கமைய 22 கரட் தங்கம் ஒரு பவுண் 7ஆயிரத்து 750 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்தமையே தங்கத்தின் விலை குறைவடைந்தமைக்கு காரணம் என்று தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், இலங்கை ரூபாவின் பெறுமதியானது மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை சடுதியாக குறைவடைய சாத்தியம் காணப்படுகின்றது என்றும் தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.