
சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகளைக் கொண்ட நடமாடும் ஆய்வுகூட பேருந்துகள் சீனாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.
குறித்த வாகனங்கள் 660 மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சுகாதார அமைச்சரிடம் நடமாடும் ஆய்வுகூட பேருந்துகளை நேற்றுமுன்தினம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இந்த நிலையில் வாகனங்களின் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அநுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, குருநாகல், மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் நடமாடும் ஆய்வுகூடங்களுடன் கூடிய இந்த பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த நடமாடும் ஆய்வுகூட பேருந்துகளில் சீனாவால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை சுகாதார ஊழியர்கள் பணிபுரிவதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.