யாழ். மாநகர முதல்வரின் குழுவினாலேயே தியாகி திலீபனின் நினைவேந்தல் குழப்பியடிக்கப்பட்டது- சுகாஸ்

ஈ.பி.டி.பி யின் ஆதரவில் உள்ள யாழ். மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் குழுவினாலேயே தியாகி திலீபனின் நினைவேந்தலின்போது குழப்பத்தை ஏற்படுத்த சதி மேற்கொள்ளப்பட்டது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரான சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நினைவேந்தல் விவகாரம் தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

ஈ.பி.டி.பி மணிவண்ணன், அரச புலனாய்வுப் பிரிவினரின் இயக்கத்தில் இயங்குகின்ற ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் சில வேற்று நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களை மேற்கொள்ளும் தரப்பினரால் நினைவேந்தலை குழப்புவதற்கு பல்வேறுபட்ட சதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் தேசிய அரசியலிலை கடத்துகின்ற, தமிழர்களுடைய அபிலாசைகளை முன்வைக்கின்ற ஒரு இடமாக, தியாக தீபத்தின் நினைவேந்தல் இடத்தினை பார்க்காமல் தமிழ் தேசிய அரசியலிலை நீக்கம் செய்து இந்தியாவிற்கு இருக்கின்ற வரலாற்று கடமையை தட்டிக் கழிக்கின்ற, மறைக்கின்ற ஒரு சதிதான் இங்கு நடந்துகொண்டு இருக்கிறது.

தியாக தீபத்தின் நினைவேந்தல் இடத்தில் அவரது அபிலாசைகளை கதைப்பது தான் முக்கிய கடமை.

தியாக தீபத்தின் அபிலாசைகளையும் ஐந்து அம்ச கோரிக்கைகளையும் அவ்விடத்தில் பேசாது வெறுமனே அழுது விட்டு செல்லுமாறு கூறுவது இந்தியாவை காப்பாற்றுகின்ற செயற்பாடு.

நினைவேந்தல்களில் அரசியல் கதைக்க கூடாது என்று கருதி இருந்தால் வேலுப்பிள்ளை பிரபாகரன் மாவீரர்கள் தினங்களில் தேசிய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் இனத்துக்கு வழிகாட்டிய மாவீரர் நாள் உரையை ஆற்றி இருக்க மாட்டார்.

உண்மையில் என்ன நடந்தது என்பதை விளங்கப்படுத்த வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாக பல்வேறு அடக்கு முறைகள் பிரயோகிக்கப்பட்டபோது தியாக தீபத்தின் நினைவேந்தலை முன்னெடுக்க எவரும் வரவில்லை.

இன்று தியாக தீபத்தை நினைவேந்துவதற்கு அடக்குமுறைகள் குறைக்கப்பட்டுள்ளதாக காட்டப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் பலர் அடிபடுகின்றார்கள்.

மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகள், பாதிக்கப்பட்ட தரப்பினரை உள்ளடக்கிய அமைப்புகளே பொதுக்கட்டமைப்பை பற்றி பேச வேண்டும்.

ஈ.பி.டி.பி கட்சியின் ஆதரவில் இருக்கின்ற யாழ். மாநகர சபை முதல்வர் எவ்வாறு பொதுக் கட்டமைப்பற்றி பேசலாம்?

தியாக தீபத்தின் நினைவேந்தல் வழமையாக, அவர் உயிர்நீத்த நேரமான 10.48 மணிக்கு அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்தவகையில், நினைவேந்தல் செய்வதற்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இடத்தில் ஈ.பி.டி.பி கட்சியின் ஆதரவில் உள்ள மணிவண்ணன் தரப்பினை சேர்ந்த ஜெயபாலன் என்பவர் முண்டியடித்துக் கொண்டு நல்லூரிலே 10.47 மணிக்கு தீபம் ஏற்றி இருக்கிறார்.

அதன்பின்னர் புதிய நேரத்தில் பாரம்பரிய நினைவேந்தல் குழுவினர் சரியாக 10.48 மணியளவில் நினைவேந்தலை முன்னெடுத்தனர். இங்கே நினைவேந்தலை குழப்பியது யார்?

10.46 இற்கு ஒரு காவடி வருகின்றது. வந்த காவடியானது மக்களை ஊடறுத்துக் கொண்டு சென்று பொதுச்சுடரையும் தாண்டிச் சென்று தாங்கள் முதலே நினைவேந்தல் சுடர் ஏற்ற வேண்டும் என முண்டியடித்தனர்.

அங்கேதான் நேற்றைய குழப்பத்திற்கான அடிக்கல் நாட்டில் வைக்கப்பட்டது.
வேலன் சுவாமிகளும், அடியாட்களை வைத்து இயங்குகின்ற முதல்வர் மணிவண்ணன் தரப்பினரும் ஜனநாயகப் போராளிகள் கட்சியினரும் தான் அந்தக் காவடியை அழைத்துக் கொண்டு வந்தார்கள் – என்றார்.

அதேநேரத்தில், ஜனநாயக போராளிகளது வாட்ஸப் குழுமத்தில், “கஜேந்திரன் எப்படியும் நாளைக்கு ஆட்களை கொண்டு வந்து விடுவான், நாங்கள் எப்படியாவது எங்கட ஆட்களை செற்பண்ணி அவையிட்ட இருந்து மைக்க அடிச்சென்றாலும் பறிக்க வேணும், போராளிகளுக்கு களங்கம் வந்தாலும் அது ஆறு மாசத்துக்குள் போய்விடும். ஒருத்தரும் அதைப்பற்றி யோசிக்க தேவையில்லை, மணி நீங்கள் அந்த காவடிக்கு இரண்டு பேரை செட் பண்ணுங்கோ” என கடந்த 25 ஆம் கதைக்கப்பட் என தெரிவித்து அதற்கான ஆதாரங்களையும் சுகாஸ் வெளியிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *