பொன்னியின் செல்வன் நாவலில் பேரழகானவராக அறியப்படும் கதாப்பத்திரங்கள் நந்தினி மற்றும் குந்தவை. சோழப் பேரரசின் மீது அதீத அன்பு கொண்ட இளவரசி குந்தவை.
சோழ நாட்டுக்குப் பல நன்கொடைகளை வழங்கி பல கோயில்கள் கட்டுவதற்குக் காரணமாக இருந்தார். கோயில்கள் கட்ட பல செலவுகள் பலரும் செய்து வந்த வேளையில், மக்களுக்கான மருத்துவமனைகளை ஏற்படுத்தி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.
ராஜராஜ சோழனான அருள்மொழிவர்மர் தஞ்சை பெருவுடையார் கோவிலைக் கட்டுவதற்கு குந்தவை பெரும் உதவியாக இருந்தார் என்று கூறப்படுகிறது.
குந்தவை சுந்தர சோழனின் மகள், ஆதித்த கரிகாலனின் அன்புத் தங்கை. அருள்மொழி வர்மனுக்கு தாய் போல அறிவுரைகள் சொல்லும் அக்கா. சோழ பேரரசின் திறமை மிகுந்த இளவரசி.
தனது வாழ்நாள் முழுவதும் தம்பி அருள்மொழி வர்மனையும், சோழப் பேரரசையும் அன்பாலும் திறமையாலும் கண் போலப் பார்த்துக்கொண்டவர் குந்தவை.
மற்றொருபுறம், சோழ அரசின் நிர்வாக முடிவுகளில் சரியான ஆலோசனைகள் வழங்குதல். நந்தினியின் நயவஞ்சகமான சூழ்ச்சிகளை அறிந்து கொள்ளுதல். இப்படி குடும்பம் மற்றும் அரச காரியங்கள் என அனைத்திலும் ஒரு கண் வைத்துக் கவனித்து காத்துவரும் திறமைமிக்க இளவரசியாக குந்தவை காணப்படுகிறார்.
குந்தவை காதலிலும் திறமை மிகுந்தவராகத்தான் இருந்தார். வந்தியத் தேவனைப் பார்த்தது முதலே அவனை நன்கு அறிந்து கொண்டு அன்புச் சேட்டைகள் மூலம் அவனைக் காதலிக்க ஆரம்பித்து விடுவார். நாவலில் சுவாரஸ்யம் சேர்க்கும் இருவருக்குமான காதலை கல்கி அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.
மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகை குந்தவையாக த்ரிஷா நடித்துள்ளார்.
இளவரசி குந்தவை பிராட்டியாரின் அழகு, அறிவு, அன்பு, திறமை, காதல் என அனைத்தையும் திரிஷா கனகச்சிதமாக வெளிப்படுத்துகிறார்.