
யாழ்ப்பாணம்,செப் 27
வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பூர்வீகக் காணிகளை விடுவித்து தருமாறு வயாவிளான் மாணம்பிராய் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்
குறித்த ஆலயத்தினை சூழவுள்ள சுமார் 600 ஏக்கர் காணி, நியாயமான காரணங்கள் ஏதுமற்ற நிலையில் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த பரிபாலன சபையினர், குறித்த காணி விடுவிக்கப்படுமாயின் சுமார் 400 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியமர முடியும் எனவும் தெரிவித்தனர்.
வலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பாக ஏற்கனவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கூடிய விரைவில் கணிசமானளவு காணிகள் விடுவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.