தியாக திலீபனின் நினைவுத் துாபி தொடர்பில் புலன் விசாரணைக்கான குழு யாழ். வருவதாக அறிவிப்பு

யாழ், செப்.28

யாழ்.நல்லுார் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உள்ள தியாக திலீபனின் நினைவேந்தல் துாபிக்கான சுற்றுவேலி அரசாங்க நிதியில் அமைக்கப்பட்டதாக கூறப்படும் விடையம் தொடர்பாக 4 வருடங்களின் பின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைத்தினால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நல்லாட்சி அரசின் காலத்தில் அப்போதைய பிரதமரும், தற்போதைய அதிபருமான ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சுக்கு ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டில் பாதுகாப்பு வேலிக்கான நிதி ஒதுக்கப்பட்டது.

அதற்கு அமைவாக அது அமைக்கப்பட்டது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு நல்லாட்சி காலத்தில் பொலிஸார் தடை உத்தரவு பெற்றனர். இதன்போது நீதிமன்றத்திற்கு முன் வைக்கப்பட்ட சமர்ப்பணங்களில் திலீபனின் நினைவுத்தூபி அரசாங்க நிதியில் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

யாழ்.பொலிஸாரினால் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் மூன்று மாதங்களுக்கு முன்னர் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு மிகக் காட்டமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு அரசாங்கம் எது எவ்வாறு ஒதுக்க முடியும்? என்று அதில் கேள்வி எழுப்பப்பட்டிருந்ததுடன், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வாக்குமூலங்களை பெற்றுக் கொள்வதற்காக புலன் விசாரணைப் பிரிவினர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *