
ஊடகங்களில் வெளிவந்ததைப் போன்று திலீபனின் நினைவேந் தலை நாம் குழப்பவேயில்லை. வேலன் சுவாமிகளும், அடியாள்களை வைத்து இயங்குகின்ற முதல்வர் மணிவண்ணன் தரப்பினரும், ஜனநாயகப் போராளிகள் கட்சியினரும்தான் குழப்பினர் – என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யின் யாழ். அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஈ.பி.டி.பி மணிவண்ணன், அரச புலனாய்வுப் பிரிவினரின் இயக்கத்தில் இயங்குகின்ற ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் சில வேற்று நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களை மேற்கொள்ளும் தரப்பினரால் நினைவேந்தலை குழப்புவதற்கு பல்வேறுபட்ட சதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்த் தேசிய அரசியலைக் கடத்துகின்ற, தமிழர்களுடைய அபிலாஷைகளை முன்வைக்கின்ற ஓர் இடமாக, தியாக தீபத்தின் நினைவேந்தலைப் பார்க்காமல், தமிழ்த் தேசிய அரசியலை நீக்கம் செய்து, இந்தியாவுக்கு இருக்கின்ற வரலாற்றுக் கடமையை தட்டிக் கழிக்கின்ற, மறைக்கின்ற ஒரு சதிதான் இங்கு நடந்துகொண்டு இருக்கிறது.தியாக தீபத்தின் நினைவேந்தல் இடத்தில் அவரது அபிலாஷைகளை கதைப்பதுதான் முக்கிய கடமை. தியாக தீபத்தின் அபிலாஷைகளையும் ஐந்து அம்சக் கோரிக்கைகளையும் அவ்விடத்தில் பேசாது வெறுமனே அழுதுவிட்டுச் செல்லுமாறு கூறுவது இந்தியாவைக் காப்பாற்றுகின்ற செயற்பாடு. நினைவேந்தல்களில் அரசியல் கதைக்கக் கூடாது என்று கருதி இருந்தால், மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் மாவீரர்கள் தினங்களில் தேசிய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த, தமிழ் இனத்துக்கு வழிகாட்டிய மாவீரர் நாள் உரையை ஆற்றி இருக்க மாட்டார். உண்மையில் என்ன நடந்தது என்பதை விளங்கப்படுத்த வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.
மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகள், பாதிக்கப்பட்ட தரப்பினரை உள்ளடக்கிய அமைப்புகளே பொதுக்கட்டமைப்பைப்பற்றி பேசவேண்டும். ஈ.பி.டி.பி கட்சியின் ஆதரவில் இருக்கின்ற யாழ். மாநகர சபை முதல்வர் எவ்வாறு பொதுக் கட்டமைப்பைப் பற்றி பேசலாம்?
தியாக தீபத்தின் நினைவேந்தல் வழமையாக, அவர் உயிர்நீத்த நேரமான 10.48 க்கு அனுஷ்டிக்கப்படுகிறது. நேற்றைய தினம் நினைவேந்தல் செய்வதற்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இடத்தில் ஈ.பி.டி.பி. கட்சியின் ஆதரவில் உள்ள மணிவண்ணன் தரப்பினை சேர்ந்த ஜெயபாலன் என்பவர் முண்டியடித்துக் கொண்டு நல்லூரிலே 10.47 மணிக்கு தீபம் ஏற்றி இருக்கிறார். அதன் பின்னர் புதிய நேரத்தில் பாரம்பரிய நினைவேந்தல் குழுவினர் சரியாக 10.48 மணியளவில் நினைவேந்தலை முன்னெடுத்தனர். இங்கே நினைவேந்தலை குழப்பியது யார்?
10.46 க்கு ஒரு காவடி வருகின்றது. அந்தக் காவடியானது மக்களை ஊடறுத்துக் கொண்டு சென்று பொதுச்சுடரையும் தாண்டிச் சென்று தாங்கள் முதலே நினைவேந்தல் சுடர் ஏற்ற வேண்டும் என முண்டியடிக்கின்றது. அங்கேதான் நேற்றைய குழப்பத்துக்கான அடிக்கல் நடப்பட்டது.
அந்த காவடியை வழிநடத்தி வந்தவர்கள் யார் என்றால் வேலன் சுவாமிகளும், அடியாள்களை வைத்து இயங்குகின்ற முதல்வர் மணிவண்ணன் தரப்பினரும், ஜனநாயகப் போராளிகள் கட்சியினரும்தான்.
ஜனநாயக போராளிகளது வட்ஸப் குழுமத்தில், ‘கஜேந்திரன் எப்படியும் நாளைக்கு ஆள்களை கொண்டுவந்து விடுவான், நாங்கள் எப்படியாவது எங்கட ஆள்களை செற்பண்ணி அவையிட்ட இருந்து மைக்க அடிச்சென்றாலும் பறிக்கவேணும், போராளிகளுக்கு களங்கம் வந்தாலும் அது ஆறு மாசத்துக்குள் போய்விடும். ஒருத்தரும் அதைப்பற்றி யோசிக்க தேவையில்லை. மணி நீங்கள் அந்த காவடிக்கு இரண்டு பேரை செட் பண்ணுங்கோ’ என கடந்த 25ஆம் கதைக்கப்பட்டது. (அதற்கான ஒலி நறுக்குகளும் சுகாஷால் வழங்கப்பட்டன) – என்றார். (அஸ்ரீம-26)