பிலிப்பைன்ஸ் புறப்பட்டார் ஜனாதிபதி ரணில்

கொழும்பு,செப் 28

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானிலிருந்து இன்று புதன்கிழமை (28) பிலிப்பைன்ஸ் புறப்பட்டார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று முன்தினம் அதிகாலை ஜப்பான் பயணமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானின் முன்னாள் பிரதமர் மறைந்த ஷின்சோ அபேயின் அரச இறுதி மரியாதை நிகழ்வில் கலந்துகொண்டார்.

தமது ஜப்பானிய விஜயத்தின்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானிய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், சிங்கப்பூர் மற்றும் இந்திய பிரதமர் ஆகியோருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்தார்.

இந்த நிலையில், தமது ஜப்பான் விஜயத்தை நிறைவுசெய்த ஜனாதிபதி ரணில், 55 ஆவது ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக பிலிப்பைன்ஸ் நோக்கி புறப்பட்டார்.

இதன்போது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பொங்பொங் மார்கஸ் (Bongbong Marcos) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா (Masatsugu Asakawa)  ஆகியோருடன் ஜனாதிபதி ரணில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஜனாதிபதியின் பிலிப்பைன்ஸ் விஜயத்தில் திறைசேரி செயலாளரும் இணைந்து கொள்ள உள்ளார். இந்நிலையில், ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் விஜயங்களை நிறைவு செய்துகொண்டு, ஜனாதிபதி எதிர்வரும் 30 ஆம் திகதி நாடு திரும்பவுள்ள்தாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *