தேசிய பேரவை இன்று முதன்முறையாகக் கூடுகிறது

புதிதாக நிறுவப்பட்ட தேசிய சபை இன்று (வியாழக்கிழமை) முதன்முறையாக கூடவுள்ளது.

இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் தேசிய சபை கூடவுள்ளதுடன், இதன்போது தேசிய பேரவையின் அடிப்படை விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தேசிய பேரவையை நிறுவுவதற்கான பிரேரணைக்கு கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது.

சபாநாயகர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த பேரவையில் பிரதமர், சபைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் மற்றும் நாடாளுமன்றத்தில் உள்ள அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 35 உறுப்பினர்கள்உள்ளடங்குகின்னர்.

எவ்வாறாயினும் இன்று நடைபெறவுள்ள தேசிய பேரவையில் தான் பங்கேற்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பல பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளதால், நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் டலஸ் அழகப்பெருமவின் கட்சி ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தேசிய பேரவையில் பங்கேற்கப்போவதில்லை என முன்னர் தெரிவித்திருந்தன.

இதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று இடம்பெறும் தேசிய பேரவையில் பங்கேற்கவுள்ளதாக அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *