தேர்தலை ஒத்திவைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – எதிர்க்கட்சி

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து மக்களின் இறைமைக்கு விடுக்கப்பட்ட பாரிய சவால் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்து உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதை ஒத்திவைப்பதே இதன் அடிப்படை நோக்கம் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பதும் ஜனாதிபதியின் சொந்த விருப்பம் என்றும் அவரது தீர்மானம் ஐ.தே.க. மற்றும் பொதுஜன பெரமுனவின் வெளிப்படையான தோல்வியை மூடிமறைக்கும் தந்திரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்திற்கு அமைய அதிகாரங்களை பிரயோகித்து உடனடியாக உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறுகிய இலக்குகளை அடைவதற்காக தேர்தலை ஒத்திவைக்க ஜனாதிபதி செயற்பட்டால், நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் ஜனநாயக ரீதியாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயார் என்றும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *