
வடக்கில் பாரம்பரிய கலைஞர்களுக்கும்,கலைகளுக்கும் இனி முன்னுரிமை அதிமாக வழங்கப்படும் என வட மாகண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:
கலைஞர்களையும் திணைக்களத்தையும் ஒன்றிணைத்து செயற்படுவதுதான் எமது நோக்கம்.இதற்காகவே 34 பிரதேச செயலகங்களில் கலாசார உத்தியோகத்தர்கள் உள்ளனர்.அதே போன்று 5 மாவட்டச் செயலகங்களிலும் அதிகாரிகள் உள்ளனர்.இது கலைஞர்களுக்கு சொந்தமான திணைக்களம்.அதனை முழுமையாக பயன்படுத்தி ,கலைஞர்கள் தமது அங்கீகாரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
கலைகளின் ஊடாக மக்களின் மனதை மாற்ற முடியும்.ஆகவே மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு அப்பால் கலைகளையும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.அப்போது தான் சிறந்த தலைமைத்துவம் வளரும்.அதே போன்று கலைஞர்களை கௌரவிக்கும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
குறிப்பாக 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இளம் கலைஞர் விருது,60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலைகுரு விருது ஆகியன வழங்கப்படுகிறது.மற்றும் சிறப்பான பயிற்சிகள் வழங்க நாம் தீர்மானித்துள்ளோம்.எதிர்வரும் 14 ஆம் திகதி நல்லூர் சம்பந்தர் ஆதீனத்தில் யோகா வகுப்புகளுடன் கூடிய பயிற்சி நெறி ஒன்று முழு நேரமாக வழங்கப்படவுள்ளது.இப்படி படிப் படியாக சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.
அந்த வகையில் முதலில் உள்ளூர் கலைஞர்களையும் ,பாரம்பரிய கலைஞர்களையும் மீட்டெடுப்போம்,வடக்கில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு உள்ளூர் கலைஞர்களுக்கு முன்னுரிமை கொடுப்போம் என்றார்.
பிற செய்திகள்