
திருகோணமலை, ஒக். 11:
திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள வியாபார நிலையங்களை பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவதற்கு கலாசார மற்றும் மத விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்பதாக அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் விதுர விக்ரமநாயக்கா போன்றோரின் அமைச்சு செயற்பாடுகளுக்கு ஆசிவேண்டி, திருகோணமலை திருக்கேதீஸ்வரத்தில் ஆலய நிர்வாகத்தினரால் விசேட பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இதனிடையே திருகோணமலைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அலுவலக வளாகத்தில் கட்சி உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வீட்டுத் தோட்ட செயற்பாடுகளை பார்வையிட்டார்.
நாடு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், ஒவ்வொருவரும் முடிந்தளவிற்கு வீட்டுத் தோட்டத்தினை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சருக்குமான சந்திப்பு இன்று திருகோணமலையில் நடைபெற்றது.
இதன்போது, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினைகள், சல்லி ஆற்றுப்படுக்கையை ஆழப்படுத்தல், வனஜீவ ராசிகள் திணைக்களத்தினால் ஏற்படுத்தப்படும் அசௌகரியங்கள் உட்பட பல்வேறு தொழில்சார் பிரச்சினைகளை கடற்றொழில் அமைச்ரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இவைதொடர்பாக அவதானம் செலுத்திய கடற்றொழில் அமைச்சர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார் என கடற்தொழில் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.