உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணை தாக்குதல் மிருகத்தனமானது: அமெரிக்கா

அமெரிக்கா,ஒக் 11

கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் முக்கியமான பாலம் அண்மையில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக குற்றம் சாட்டிய ரஷ்யா, உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

குறைந்தபட்சம் 5 இடங்களில் ஏவுகணைகள் விழுந்து வெடித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த வீடியே சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், ஏராளமானோர் காயமடைந்தனர். உக்ரைன் மக்கள் மீது புடின் நடத்தும் சட்ட விரோதப் போரின் முழுமையான மிருகத்தனம், மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மக்களுக்கு அமெரிக்கா நீண்ட காலம் ஆதரவு தர வேண்டும் என்ற எங்கள் உறுதிப்பாட்டை, ரஷ்யாவின் இந்தத் தாக்குதல்கள் வலுப்படுத்துகின்றன.

எங்களது நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, ரஷ்யாவிற்கு நாங்கள் தொடர்ந்து பாடம் புகட்டுவோம். போர்க்குற்றங்களுக்கு புடின் மற்றும் ரஷ்யாவை பொறுப்பு ஏற்க வைப்போம். உக்ரைன் இராணுவம் தங்கள் நாட்டையும், சுதந்திரத்தையும் பாதுகாக்கத் தேவையான ஆதரவை வழங்குவோம் என பைடன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *