நாட்டின் பாதுகாப்பு உணவு, பொருளாதாரத்தில் தங்கியுள்ளது: ஜனாதிபதி

கொழும்பு, ஓக.12

நாட்டின் பாதுகாப்பு இராணுவத்திடம் மட்டுமன்றி உணவு மற்றும் பொருளாதார பாதுகாப்பிலும் தங்கியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் போசனையை உறுதி செய்யும் நிகழ்ச்சி தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் வைத்து ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

உணவு பாதுகாப்பு மற்றும் போசனையை உறுதி செய்யும் நிகழ்ச்சியை நடைமுறைப்படுத்தும் போது அரச பொறிமுறையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக ஏதேனும் பிரச்சினைகள் உருவாகுமாயின் அதனை சரி செய்வதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தலையீடு செய்ய நேரும் என அவர் தெரிவித்தார்.

‘எந்தவொரு பிரஜையும் உணவின்றி பசியால் வாடக்கூடாது’ என்ற தொனிப்பொருளில் உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதி செய்வதற்கு கிராமிய பொருளாதார மேம்பாட்டு மையத்தை பலப்படுத்தும் பல் துறைகளின் ஒன்றிணைந்த பொறிமுறையொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின்பேரில் அண்மையில் நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அனைத்து மாவட்டங்களிலும் கிராம மட்டத்தில் கிராமிய பொருளாதார மேம்பாட்டுக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்வதற்கு பல்வேறு வேலைதிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ற வகையில் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளும்போது ஏற்படும் தடைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, எரிபொருள் மற்றும் தேவையான உரத்தை பெற்றுக்கொள்வது தொடர்பிலும், காணிப்பிரச்சினை, விதைப் பற்றாக்குறை, வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *