வல்லையில் மூன்று பெண்களிடம் 10 பவுண் நகை வழிப்பறி!

யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் மூன்று பெண்களிடம் சுமார் 10 பவுண் தங்க நகைகள் வழிப்பறி கொள்ளை இடம்பெற்றுள்ளது.

வல்லை வெளி பகுதியில் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,வல்லை வெளி பகுதி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை வழிமறித்த வழிப்பறி கொள்ளையர்கள் கத்தியை அவர்களின் கழுத்தில் வைத்து , அவர்கள் அணிந்திருந்த ஒன்றரை பவுண் தங்க சங்கிலி உட்பட சுமார் 08 பவுண் நகைகளை வழிப்பறி சென்று அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் இடம்பெற்று ஒரு சில மணி நேரத்தில் , வல்லை வெளி பகுதி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரை பின்னால் வந்து மோதி அப்பெண்ணை விபத்துக்கு உள்ளாக்கி விட்டு அப்பெண் அணிந்திருந்த சுமார் ஒன்றரை பவுண் தங்க சங்கிலி மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியையும் வடமராட்சி பகுதியை இணைக்கும் பகுதியாக வல்லை பகுதி காணப்படுகிறது. குறித்த பகுதி நீரேந்து பகுதியாக காணப்படுவதுடன் ஆள் நடமாட்டம் குறைந்த குடியிருப்புக்கள் அற்ற பகுதியாகும்.

குறித்த பகுதி இரவு வேளைகளில் இருள் சூழ்ந்து காணப்படுவதனால், அப்பகுதிகளில் வழிப்பறி கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரிப்பதனால் , அப்பகுதி ஊடாக பயணிப்பது ஆபத்து நிறைந்ததாக தற்போது மாறி வருகிறது.

எனவே சம்பந்தப்பட்ட தரப்புகள் அப்பகுதியில் மின் விளக்குகளை பொருத்துதல் , உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *