குழந்தைகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு – ஜனாதிபதி

சிறு குழந்தைகளை போராட்டங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) முற்பகல் சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உடல், மன, தார்மீக, மத மற்றும் சமூக ரீதியாக அவர்களின் முழு வளர்ச்சியை உறுதிசெய்யவும் சுரண்டல் மற்றும் பாகுபாடுகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்கவும் அவர்களின் நலனை மேம்படுத்த அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அரசமைப்புச் சட்டத்தில், குழந்தைகளைப் பாதுகாப்பது ஒரு அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

சிறுவர்களை பாலியல் ரீதியில் பாதிக்கப்படுவதில் இருந்து சிறுவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு சட்டமொன்றின் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சட்டமா அதிபருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிப்புரை விடுத்தார்.

பெற்றோரிடமிருந்து பிரிந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் குடியேறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் உள்ள சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது கவனம் செலுத்தினார்.

சிறுவர் இல்லங்களிலுள்ள சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் ஜனாதிபதி இதன்போது கவனம் செலுத்தியதுடன், சிறுவர் இல்லங்களில் உள்ள விசேட தேவையுடைய சிறுவர்களை இனங்கண்டு அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சிறுவர் இல்லங்களுக்கு பொறுப்பான பாதுகாவலர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதன் மூலம் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *