
ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை கேடயமாக பாவிப்பது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பாரிய குற்றமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் சிறுவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உடல், உள ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும், மத, சமூக ரீதியாகவும் முழுமையாக வளர்ச்சி காண்பதை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
அவர்கள் சுயநல தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கும் பாகுபாடு காட்டப்படுவதில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதும் அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு என வலியுறுத்தியுள்ளார்/
சிறுவர்களை பாலியல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்கு எதிராக சட்டமொன்றை அவசரமாக தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சட்டமா அதிபருடன் ஆலோசனை நடத்தி, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சிறுவர் இல்லங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதன் மூலம் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.