
மலையகம்,ஒக் 12
பதுளை – நமுனுகுல பெருந்தோட்ட நிறுவனத்திற்குட்பட்ட கனவரல்ல ஈ ஜி கே பிரிவின் மின்சாரம் தாக்கி தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளார்.
தொழில் அமைச்சின் செயலாளருக்கும், தொழில் ஆணையாளர் நாயகத்துக்கும் அவரினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தொழிலாளி தமக்கு நிபுணத்துவம் அற்ற தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டபோது உயிரிழந்தாரா? என்பது குறித்து கண்டறியுமாறும் அமைச்சர் அறிக்கை ஒன்றின் மூலம் பணித்துள்ளார்.
அவ்வாறு இடம்பெற்றிருக்குமாயின் தவறிழைத்தோருக்கு எதிராக தொழில் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
கனவரல்ல தோட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளம் தொழிலாளி கடந்த ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
பதுளை தடவியல் மருத்துவ அதிகாரி முன்னெடுத்த பிரேத பரிசோதனையில், குறித்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.