தற்காலிக கடைகள் அமைப்பதற்கான ஏலத்தில் 46 இலட்சம் ரூபாய் லாபம்-பாலசந்திரன் தகவல்!

ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இடங்களில் தற்காலிக கடைகள் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏலத்தின் மூலம் நகர சபைக்கு 46 இலட்சம் ரூபா வரை வருமானம் கிட்டியுள்ளதாக ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் தவிசாளர் பாலசந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதாவது,தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஹட்டன் நட்சத்திர சதுக்கம், ஹட்டன் பேருந்து தரிப்பிடம் மற்றும் ஹட்டன் பொதுச்சந்தை பகுதிகளில் உள்ள 155 இடங்களில் தற்காலிக கடைகளை அமைப்பதற்கான ஏலம் நகரசபை மண்டபத்தில் நேற்று (11) இடம்பெற்றது.

இதன்போதே வியாபாரிகளால் மேற்படி இடங்கள், ஏலம் மூலம் பெறப்பட்டுள்ளன.

குறித்த இடங்களில் தற்காலிகமாக அமைக்கப்படும் கடைகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கான பொறுப்பும் ஏலத்தின் மூலமே வழங்கப்பட்டுள்ளது.அதற்கான ஒப்பந்தம் 4 லட்சம் ரூபாவாகும்.

அத்துடன், தீபாவளி பண்டிகைக்கான வியாபாரத்தை முன்னெடுப்பதற்கு ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் மண்டபமும் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் – டிக்கோயா நகர சபையால் வழங்கப்படும் ஆலோசனைகளைப் பின்பற்றியே வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், இதனை கண்காணிப்பதற்கு அதிகாரிகள் மட்டத்திலான குழுவொன்று பணியில் ஈடுபடுத்தப்படும் எனவும் தவிசாளர் தெரிவித்தார்.

அதேவேளை, வியாபாரிகள் மற்றும் நகருக்கு வரும் நுகர்வோரின் பாதுகாப்பு கருதி காவல்துறையினரால் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது. பண்டிகை முடியும்வரை தற்காலிக காவல் அரணொன்றும் அமைக்கப்படவுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *