
நாட்டினது பொருளாதார நிலை நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டுகொண்டிருக்கிறது.மீள கட்டியெழுப்ப முடியாத நிலைக்கு பொருளாதாரம் இன்று சீரழிந்து கிடைக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர்கள் இபொருளாதார குற்றம் இழைத்திருக்கிறார்கள் என ஐ.நா வில் குறிப்பிடுகின்ற பொழுது அவ்வாறு குற்றம் இழைத்தவர்கள் இல்லை என இன்றைய அரசாங்கம் நியாயப்படுத்த முயல்கின்றது.
இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தினை முகாமை செய்யாததனால் சரியான முறையிலே முடிவுகளை எடுக்காததால் ஏற்பட்ட சீரழிவினை இன்று நாம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம்.
இன்று ஐ.நா வில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றதாவது ,பொருளாதார குற்றம் இழைத்திருக்கிறது ராஜபக்ஷ அரசாங்கம்.
ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருந்தவர்கள் பொருளாதார குற்றம் இழைத்திருக்கிறார்கள்.கோட்டாபய ராஜபக்ஷ பொருளாதார குற்றம் இழைத்திருக்கிறார் என்பது ஐ. நா வில் மிகத்தெளிவாக குறிப்பிடப்படுகின்றது.
ஆனால் இன்று இந்த நாட்டில் என்ன நடைபெறுகின்றது?மீண்டும் இந்த ராஜபக்ஷக்கள் எழுந்து வந்து பேரணிகளை நடத்தி கோஷங்களை எழுப்பி அரசை நாங்கள் பிடிப்போம் ,நாட்டை பிடிப்போம் ,மீண்டும் ராஜபக்ஷ் தலைமையில் ஆட்சியை ஏற்படுத்துவோம் என இந்த குற்றம் இழைத்தவர்கள் எல்லாம் நகரம் ,நகரமாக சென்று பேரணிகளை நடத்துகின்ற நிலைமை இன்று காணப்படுகிறது.
அவர்களுக்கு எதிராக எந்த சட்டத்தையும் நடைமுறைப்படுத்தியதாக இல்லை ,நாட்டில் நடுத்தர வருமானம் பெறுகின்ற நாடு என்ற நிலையில் இருந்து குறைவான வருமானம் பெறுகின்ற நாடு என்ற பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கிறது.
அப்போது தான் சர்வதேசத்திடமிருந்து உதவிகளை பெற முடியும்
என்ற அடிப்படையில் நாட்டினது நிலைமையை நடுத்தர வருமானம் பெறுகின்ற நாட்டினது நிலைமையை ,குறை வருமானம் பெறுகின்ற நிலைமைக்கு தள்ளி இருக்கிறவர்கள் இந்த ராஜபக்ஷக்கள் என்பதும் ,அதே போல இந்த மொட்டுக்கட்சியின் ராஜபக்ஷக்களின் ஊழல் காரணமாக இந்த நாட்டினது பொருளாதாரம் சீரழிக்கப்பட்டிருக்கின்றது.
இன்றைய அரசாங்கத்தில் பதவி வகிக்கின்ற ,அமைச்சரவையில் இருக்கின்ற பெரும்பாலானோர் பொருளாதார குற்றம் இழைத்தவர்களாகவே இருக்கிறார்கள் ,அவர்களை தான் இந்த அரசாங்கம் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது.
பொது மக்களின் பணத்தினை கொள்ளை அடித்தவர்களுக்கு எதிராக மக்கள் வீதியில் வந்து நியாயம் கேட்கின்ற பொழுது அந்த மக்களை அடக்கி ஆள பார்க்கின்றது என்பது ஜனநாயகத்து முற்றுப்புள்ளி வைக்கின்ற செயற்பாடாக இருக்கின்றது.
பொருளாதார குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் ,மக்களின் கோஷங்களை கேளுங்கள் ,ஜனநாயகத்தை முறியடிக்கும் செயற்பாட்டினை நிறுத்துங்கள் என்ற செய்தியை அரசாங்கத்திற்கு சொல்ல வேண்டி இருக்கிறது.ஆகவே பொறுப்புடன் செயற்படுங்கள் என இந்த அரசாங்கத்திற்கு கூறிக்கொள்ள வேண்டியிருக்கிறது.என்றார்.
பிறசெய்திகள்