உக்ரைன் விவகாரம்: ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

ரஷ்யா உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக்கொண்டதற்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம், நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்துள்ளன. மேலும் சீனா மற்றும் இந்தியா உட்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன.

ரஷ்யாவைத் தவிர, பெலாரஸ், ​​வடகொரியா, சிரியா மற்றும் நிகரகுவா ஆகிய நான்கு நாடுகள் வாக்கெடுப்பை நிராகரித்தன.

ரஷ்யா படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவிற்கு எதிராக பதிவான அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் இதுவாகும்.

உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி மாதம் இராணுவ நடவடிக்கையை தொடங்கிய ரஷ்யா, அண்மையில் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், சபோரிஸியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொண்டது.

இதற்கு அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.

முன்னதாக இந்த தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யா முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *