
குறுகிய காலத்தில் நாட்டின் கவனத்தை ஈர்த்த தேவ்மி ரன்சர குலதுங்க திடீர் சுகயீனம் காரணமாக துரதிஷ்டவசமாக காலமானார்.
பிறப்பிலிருந்தே நரம்பியல் கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர், புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் சாதாரண தரபரீட்சையில் 09 ஏ பெற்று, நாட்டின் கவனத்தை ஈர்த்தார்.
விதியை மீறி கல்வியில் சிறந்து விளங்கிய அவர், சுகவீனம் காரணமாக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
மாத்தறை பம்பரந்த சதர்மராஜா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்தார். கணிதப் பிரிவில் உயர்தரம் கற்கும் ஆசையைக் கொண்டிருந்த போதும் உடல்நிலையைக் கருத்திற் கொண்டு தகவல் தொழில்நுட்பத்தில் உயர்கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்தார் நடக்க முடியாத அவரை காலையில் பாடசாலைக்கும் மாலையில் வீட்டுக்கும் சுமந்து செல்வது அவரின் பெற்றோருக்கு சுகமான சுமையாகவே இருந்தது.
எழுதும் போது பேனையின் மூடியைக் கழற்றி இன்னொருவர் அவரது கையில் பேனையைக் கொடுக்க வேண்டும். கொப்பியில் ஒரு பக்கத்தை எழுதி முடித்தால் மறுபக்கத்தில் தொடர இன்னொருவர் தான் அந்தத் தாளைப் புரட்டிக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறான சிரமங்களுக்கு மத்தியிலும் உயர்தரக் கல்வியை மன உறுதியுடன் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.