
பல கோடி ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் 3 வங்கிக் கணக்குகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சோதனையிட்டுள்ளனர்.
அந்த கணக்குகளில் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் குறைவாகவே வைப்பில் இருப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனினும், திலினி பிரியமாலி மோசடி செய்ததாக கூறப்படும் சுமார் 250 கோடி ரூபா குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
குறித்த பணத்தை கண்டறிவதற்காக பல திணைக்களங்கள் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, திலினி பிரியமாலி கள பரிசோதனைகளுக்காக 4 இடங்களுக்கு நேற்று அழைத்து செல்லப்பட்டிருந்தார்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், உலக வர்த்தக மையத்தில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களுக்கு நேற்று தினம் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
வெளிநாடுகளில் நிதி வைப்பு மற்றும் மேலும் சில வர்த்தகங்களுக்கான நிதி வைப்புக்காக இலாபத்தை பெற்றுத்தருவதாக கூறி அவர் உலக வர்த்தக மைய மேற்கு கோபுரத்தின் 34 ஆம் தளத்தில் நிறுவனம் ஒன்றை நடத்திச் சென்றிருந்தார்.
கோடீஸ்வர வர்த்தகர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் அவரது நிறுவனத்தில் வைப்பு செய்துள்ளதாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு கையடக்க தொலைபேசிகள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பிறசெய்திகள்