
கொழும்பு, ஒக் 14
உத்தியோகபூர்வ வங்கி முறையின் ஊடாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு வரி அறவிடப்படாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று
தொழிலாளர் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் மாதாந்த வருமான வரி தொடர்பான நிலைமையை விளக்கிய அமைச்சர், உத்தியோகபூர்வ வங்கி முறைக்கு வெளியே சட்டவிரோதமாக நாட்டுக்கு அனுப்பப்படும் பணத்திற்கு இந்த வரிச் சலுகை கிடைக்காது என்றார்.
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு பணம் அனுப்பும் நபர்கள் தொடர்பில் மத்திய வங்கி மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், இதுவரையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.