
பதுளை – நமுனுகுல பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட கனவரல்ல ஈ ஜி கே பிரிவில், மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், தொழில் அமைச்சில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்ரகீர்த்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் நமுனுகல பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு இடையே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, குறித்த தொழிலாளியின் மரணம் தொடர்பில், தொழில் திணைக்களம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளின் முன்னேற்றம் என்பன குறித்து விளக்கமளிக்கப்பட்டதாக தொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதே நேரம், இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, மரணித்த தொழிலாளியின் குடும்பத்துக்கு, 15 இலட்சம் ரூபா இழப்பீட்டை வழங்க முடியும் எனத் தெரிவித்திருந்த குறித்த தோட்ட நிர்வாகம் தற்போது 40 இலட்சம் ரூபா இழப்பீட்டை வழங்க உறுதியளித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், குறித்த தோட்ட நிறுவனம் வழங்க முன்வந்த இழப்பீடு குறித்து கலந்தாலோசித்து முடிவை அறிவிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
பிறசெய்திகள்