
கொழும்பு,ஒக் 14
கசினோ நிலையத்தில் மிளகாய் துாளை வீசி ரூ.27 லட்சம் பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருக்கின்றனர்.
குறித்த சம்பவம் கொள்ளுப்பிட்டி, சாகர வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த கசினோ நிலையத்திலிருந்து 27 இலட்சம் ரூபா பணத்தை, அருகே உள்ள அந்த நிலையத்தின் அலுவலகம் ஒன்றுக்கு பெண் ஊழியர் ஒருவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருடன் எடுத்துச் சென்றுள்ளார்.
பணம் அடங்கிய பெட்டி பாதுகாப்பு உத்தியோகத்தரின் கைகளிலேயே இருந்துள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் அருகே காத்திருந்த இருவர், திடீரென வந்து மிளகாய் பொடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பின்னர் பணப் பெட்டியை பறிக்க முற்பட்ட போது, குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் பணப் பெட்டியினாலேயே சந்தேக நபரை தாக்கியுள்ளார். இதன்போது பெட்டியிலிருந்த பணம் பாதையில் சிதறியுள்ளது.
இந்நிலையில், கொள்ளையிட வந்த சந்தேக நபர்கள் தாம் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையிலேயே இது குறித்து கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.