வீதியை கடக்க முயன்ற வயோதிபபெண் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இச்சம்பவமானது இன்று பேருவளை – மாகோன – ஹல்கந்தவில வீதியின் வெல்லச் சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹல்கந்தவில அணைக்கட்டுச் சந்தியில் வசிக்கும் அனகியத்தயியகே நந்தாவதி என்ற பெண் என தெரியவந்துள்ளது.
குறித்த சந்தியில் மாகோனையிலிருந்து ஹல்கந்தவில நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளே இவ்விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அப்பெண் சந்தைக்கு செல்வதற்கு வீதியை கடக்க முற்பட்ட வேளையிலேயே இவ்விபத்து நிகழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வைத்தியசாலையில் அப்பெண்ணை அனுமதித்த வேளையில் அப்பெண் முன்னதாகவெ இறந்து விட்டார் என மருத்துவர் கூறியுள்ளதாக பயாகல பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் விபத்தனை ஏற்படுத்திய அம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரை பயாகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.