
திருகோணமலையை மூலோபாய துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகள் தேர்தலை இலக்காகக் கொண்டதல்ல என்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காகவே மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டம் (சுர்பானா ஜுரோங் திட்டம்) தொடர்பில் திருகோணமலை ஒர்ஸ் ஹில்லில் இன்று (14) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கு எண்ணெய் தாங்கிகளை வழங்கும் போது முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, எண்ணெய் தாங்கிகளை வழங்கும் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தால் நாடு எரிபொருள் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்காது என்றும் தெரிவித்தார்.