
அடுத்த 48 மணித்தியாலங்களில் களு, களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்நிலங்களில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக்க, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பயகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட களனி ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள தாழ்நிலங்களில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்.
மேலும், திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜாஎல, கட்டான மற்றும் வத்தளை பிரதேச செயலகப் பிரிவுகளில் அத்தனகலு ஓயா மற்றும் உறுவல் ஓயா பள்ளத்தாக்குகளின் இருபுறமும் உள்ள தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் சில இடங்களில் பெய்து வரும் அடை மழை காரணமாக நீர் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் சில இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
பாலிந்தநுவர மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுகளில் களுகங்கையின் இருபுறமும் உள்ள தாழ்நிலங்களில் சிறு வெள்ளம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ஆற்றுப் பள்ளத்தாக்குகளைச் சுற்றியுள்ள மக்களுக்கு இது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
குக்குலே கங்கை மற்றும் பொல்கொல்ல நீர்த்தேக்கங்களிலும் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.