
யாழ்., ஒக்.15
கோடரியால் தாக்கப்பட்டு கை துண்டாடப்படும் நிலையில் ஒருவர் யாழ். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை சாவகச்சேரி-கச்சாய் வீதியில் இடம்பெற்றுள்ளது.
மனைவியுடன் வாக்குவாதம் மேற்கொண்டு தாக்கிய கணவரை, மனைவியின் உறவினர் ஒருவர் தடுக்கச் சென்றுள்ளார். ஆயினும் கணவர் மனைவியை தொடர்ந்து தாக்கியதையடுத்து ஆத்திரமடைந்த உறவினர் கண்டங்கோடரியால் கணவரைத் தாக்கியுள்ளார்.
கணவர் கையில் ஆழமான படுகாயத்துக்குள்ளாகிய நிலையில் அங்கிருந்தோரால் மீட்கப்பட்டு சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவம்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து கோடரியால் தாக்கியவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனப் பொலிஸார் தெரிவித்தனர்.