
கல்வியில் கூட தென்னாசியாவில் உயர்ந்த நிலையில் இருந்த ஒரு நாடு. அவ்வாறு இருந்த நாட்டை ஆட்சியாளர்கள் துர்ப்பாக்கிய நிலைக்கும், கையேந்துகின்ற நிலைக்கும் கொண்டு வந்து விட்டார்கள் என முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாளை என்ன நடக்கும், அடுத்த மாதம் என்ன நடக்கும், ஜனவரி என்ன நடக்கும் என ஒவ்வொரு பொருளாதார நிபுணர்களும் ஒவ்வொரு வகையான கருத்துக்களை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
உலக நாடுகளில் எமது நாடு இன்று கறுப்பு மை பூசப்பட்டது போல ஒரு வித்தியாசமான தாழ்ந்த பார்வையோடு பார்கின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
எல்லா வளங்களையும் கொண்டிருக்கும் எமது நாடு. கல்வியில் கூட தென்னாசியாவில் உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு நாடு. அவ்வாறு இருந்த நாட்டை ஆட்சியாளர்கள் துர்ப்பாக்கிய நிலைக்கும், கையேந்துகின்ற நிலைக்கும் கொண்டு வந்து விட்டார்கள்.
எல்லோரும் இன்று கடனாளிகளாக, ஒரு நேர சாப்பாட்டிற்கு வழியில்லாதவர்களாக பலர் வாழுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்கள் பரிதாபகரமான நிலையில் இருப்பதாக செய்திகள் மூலம் அறிய முடிகிறது.
இவ்வாறான நிலையில் புதிய ஜனாதிபதி உணவு உற்பத்திக்காக எல்லோரும் தயாராகுங்கள் என அடிக்கடி பேசி வருவதை நாங்கள் காண்கின்றோம். திருகோணமலையில் பேசுகின்ற போது கூட அவ்வாறு பேசியுள்ளார். அம்பாறையிலும் பேசியுள்ளார்.
எமது மக்களைப் பொறுத்தவரை விவசாயம் செய்ய ஆசைப்படுகிறார்கள். விவசாயம் செய்ய வளம் இருக்கின்றது. மண் வளம் இருக்கின்றது.
இலங்கையில் 40 வீத உழுந்து உற்பத்தியை வவுனியா மாவட்டம் ஒரு காலத்தில் வழங்கியது. இன்று உழுந்து தேவையை பூர்த்தி செய்ய முடியாது உள்ளது.
வனவளத் திணைக்களத்தினால் போடப்படுகின்ற தடை அதனை பாதித்துள்ளது. மூதாதையர் செய்த நிலங்கள், யுத்தத்தினால் சில காலம் கைவிடப்பட்டிருந்த நிலங்கள் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயம் செய்ய முடியாத வகையில் தடையை ஏற்படுத்தியுள்ளது.
டீசல் பிரச்சனை, யூரியா பிரச்சனை, வனவளத் திணைக்களம், குளம் என பல பிரச்சனைகள் இருகின்றன. வனவளத் திணைக்களத்தின் பிரச்சனைகளை தீர்க்க கடந்த காலங்களில் பல முயற்சிகளை செய்தோம். சில பிரச்சனைகள் தீர்க்கப்பட்டாலும், பல பிரச்சனைகள் தீர்க்கப்படாது தேங்கி கிடக்கிறது.
தேக்கு மரத்தை குளத்திற்குள் நடுகிறார்கள். அவ்வாறான பிழையான நடைமுறைகளுக்கு எங்களது அரச அதிகாரிகளும் ஒத்துப் போகிறார்கள்.
அரச அதிகாரிகளும், அரசியல்வாதிகள், மக்களுடன் சேர்ந்து நின்றால் மட்டும் தான் இந்தப் பிரச்சனைகளை தீர்க்க முடியும். தென்னிலங்கையில் இவ்வாறான பிரச்சனைகள் கிடையாது.
வடக்கு – கிழக்கு பகுதியில் தான் இவ்வாறான பெரிய அநியாயம் யுத்தத்திற்கு பின்னர் தொடர் தேர்ச்சியாக நடந்து வருகின்றது. எனவே, இப் பிரச்சனையை தீர்ப்பதாக இருந்தால் தற்போது வந்துள்ள ஜனாதிபதியோடு நாங்கள் எல்லோரும் இணைந்து பேச முடியும்.
நாட்டில் பஞ்சத்தை போக்க விவசாயம் செய்யுமாறு சொல்லுகின்ற போது எமக்கு நடத்திருக்கின்ற இந்த அநியாயத்திற்கு நீங்கள் தான் நியாயம் தாருங்கள். அதன் மூலம் தான் நாட்டில் ஏற்பட்டுள்ள பஞ்சத்தை தீர்க்க எமது மக்களும் பங்களிப்பு செய்ய முடியும் எனச் சொல்வோம். இதன் மூலம் எமது மக்களின் பிரச்சனையை தீர்க்க முடியும் எனத் தெரிவித்தார்.
பிறசெய்திகள்