
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள், இளைஞர்களை இலக்கு வைத்து பல நாள்களாக உயிர்கொல்லிப் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த பிரதான முகவர் உட்பட 4 பேர் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேகநபர்களிடமிருந்து ஆயிரம் போதை மாத்திரைகள், 210 மில்லி கிராம் உயிர்கொல்லி ஹெரோய்ன் என்பன மீட்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த நபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் 19, 23, 24, 26 வயதுகளை உடையவர்கள். உடுவில் மல்வம், கல்லுண்டாய், வட்டுக்கோட்டை, கொக்குவில் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு முன்பாகவுள்ள 3 புடவை விற்பனை நிலையங்களில் பணியாற்றுபவர்கள்.
சந்தேகநபர்கள் தமது புடவைக் கடைகளில் வைத்தும், போதனா மருத்துவமனைக்கு பின்புறமாக வைத்தும் உயிர்கொல்லி போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளனர்.
இவர்கள் உயிர்கொல்லி போதை மாத்திரை அடங்கிய ஒரு கார்ட்டை 1,500 ரூபாவுக்கும், ஒரு மருந்து வில்லையை 250 ரூபாவுக்கும் விற்பனை செய்துள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தியாவுக்குச் சென்று வரும் தமிழ் வர்த்தகர் ஒருவர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரும் பஸ்ஸில் உயிர்கொல்லி போதை மாத்திரைகள் அடங்கிய ‘பார்சலை’ அனுப்புவார் என்றும், யாழ். நகர் நாவலர் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் அதனைப் பெற்றுக்கொள்வதாகவும் சந்தேகநபர்கள் விசாரணைகளின்போது குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், இந்தியாவிலிருந்து மன்னாருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரைகளை கடத்தும் மருத்துவர் ஒருவரிடமிருந்தே இவர்கள் இதனைக் கொள்வனவு செய்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தைப் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
யாழ். குடாநாட்டில் உயிர்கொல்லி ஹெரோய்ன் வியாபாரிகள் பலர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அதற்கு மாற்றீடாக உயிர்கொல்லி போதை மாத்திரைகள் பயன்படுத்துவது அதிகரித்து வருகின்றது என்று பொலிஸார் கூறுகின்றனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற பெண் ஒருவர் உயிர்கொல்லி போதை மாத்திரைகளுடன் கிளிநொச்சியில் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார். கோப்பாய் பொலிஸ் பிரிவில் இருவர் உயிர்கொல்லி போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட 4 பேரை யாழ். நகரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிறசெய்திகள்