பைஸன் காட்டெருமைகளை இந்தியாவிடம் கோரும் இலங்கை!

17 ஆம் நூற்றாண்டின் இறுதி காலப்பகுதியுடன் இலங்கையிலிருந்து முற்றாக அழிந்துபோன கௌர்ஸ் (Gaurs) அல்லது இந்தியன் பைஸன்களை (ஒரு வகை காட்டெருமை) ஏற்றுமதி செய்து இலங்கையில் அதன் பெருக்கத்தை அதிகரிக்கும் திட்டத்தை இந்திய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக இந்தியாவின் தி இந்து செய்திவெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு அனுமதி கிடைத்தால், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இதுபோன்ற முதல் ஒப்பந்தம் இதுவாக அமையும். மேலும் “வனவிலங்கு அல்லது விலங்கியல் இராஜதந்திரம்”என்ற உலகளாவிய போக்கின் ஒரு பகுதியாக இது இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆகஸ்ட் மாதம் கோரிக்கையைப் பெற்ற இந்திய வெளியுறவு அமைச்சு (MEA), ஒரு காளை உட்பட குறைந்தது ஆறு மாதிரிகளை கொண்டு செல்வதற்கான திட்டம் குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு அமைச்சிடம் (MoEF) ஆலோசனை கோரியுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கை விலங்கியல் திணைக்களத்தின் முன்மொழிவின்படி, [சர்வதேச ரீதியாக பரிந்துரைக்கப்பட்ட] வழிகாட்டுதல்களுக்கு இணங்க மீண்டும் காட்டுக்குள் அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக, ஐந்து வருட காலத்திற்குள் சுமார் 12 விலங்குகளை கொண்ட மந்தையை உருவாக்கி இலங்கையின் மீள அறிமுகப்படுத்தப்படும் திட்டம் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்னீர் மற்றும் காடுகளின் பல்லுயிர் பெருக்கத்தை மீட்டெடுப்பதற்கான தனது பணிக்காக, 2022 லின்னேயன் பதக்கம் (இங்கிலாந்தில் உள்ள விலங்கியல் நோபல் பரிசுக்கு சமம்) பெற்ற உலகப் புகழ்பெற்ற இலங்கை சூழலியலாளர் ரொஹான் பெத்தியகொடவிடமிருந்து இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கால நிலைக்கு அவை உகந்தவையா, அவற்றினால் அங்கு வசிக்க முடியும் என்பது குறித்து மதீப்பீடு செய்துவருவதாகவும், இதற்கு பல மாதங்கள் ஆகும் என்றும் இந்தியாவின் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் பணிப்பாளர் தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்.

உலகில் ஒத்த சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட அண்டை நாடுகளுக்கு இடையில் விலங்குகளை பரிமாற்றும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.

எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் உள்ள அனைத்து மந்தைகளும் அழிக்கப்பட்ட பிறகு கனடாவிலிருந்து அமெரிக்க காட்டெருமைகள் வழங்கப்பட்டன.

மேலும் ஐக்கிய இராச்சியம் சமீபத்தில் 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு 2022 ஜூன் இல் ஐரோப்பிய காட்டெருமையை (விசான்ட்) அறிமுகப்படுத்தியது அந்தவகையில், சிங்களத்தில் கவரா என்று அழைக்கப்படும் குறித்த காட்டெருமை ஒரு காலத்தில் இலங்கையில் பரவலாக இருந்ததாகவும், நாட்டில் உள்ள பழங்கால குகைகளில் காணப்படும் தொல்பொருள் சான்றுகள் இருப்பதாகவும் இலங்கை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இருப்பினும், 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில், இந்த இனம் இலங்கையில் அழிந்துவிட்டதாகத் தோன்றுகிறது, அவற்றின் படங்கள் மற்றும் புராணங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளஎன பெத்தியாகொட குறிப்பிடுகிறார்.

பிப்ரவரி 2020 இல் நீலகிரி வனப் பிரிவில் நடத்தப்பட்ட மதிப்பீட்டுக்கமைய, இப்பிரிவில் சுமார் 2,000 இந்திய பைஸன் அல்லது காட்டெருமைகள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தேயிலை தோட்டங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காட்டெருமைகளால் தாக்கப்பட்ட அல்லது காயப்படுத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

2019 ஆண்டு புள்ளிவிவரங்களுக்கமைய, இவ்வகை காட்டெருமைகளின் தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் ஏழு பேர் காயமடைந்ததாக தி இந்து தெரிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *