
அரசாங்கத்தின் சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சுயாதீனமாக ஒரு புதிய அமைப்பை உருவாக்கவுள்ளதாக உயர்மட்ட வட்டாரம் ஒன்றை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க போன்ற சில அமைச்சரவை அமைச்சர்களும் அடங்குவர் என தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட தலைமைப் பதவியிலிருந்து அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஏற்கனவே இராஜினாமா செய்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்த டயனா கமகே மற்றும் அரவிந்த் குமார போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய உருவாக்கத்துடன் இணைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான இரண்டு அணிகளும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தலைமையிலான இரண்டு அணிகளும் ஏற்கனவே அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளனர்.
இந்த இரண்டு குழுக்களும் தற்போது எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளன என்றும் ஆனால், முன்மொழியப்பட்ட கட்சி தொடர்ந்தும் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.