32 வருடங்களுக்குப் பின் பூர்வீக காணிகளில் குடியேறிய அம்பாறை மக்கள்!(படங்கள் இணைப்பு)

அம்பாறை மாவட்டத்தின் கனகர் கிராம மக்கள் சுமார் 32 வருடங்களுக்குப் பின்  தங்களது பூர்வீக் காணிகளில் குடியேறியுள்ளனர். 

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறுவதற்கு பல்வேறு எதிர்ப்புக்களைச் சந்தித்த மக்கள் தற்போது துணிச்சலாக தமது காணிகளை தாமாகவே முன்வந்து துப்பரவு செய்து வருகின்றனர்.

சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

(16.10.2022) அன்று சர்வதேச உணவு தினமாகும்.  சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பின் பங்களிப்புடன் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு மேற்படி   கிராமத்தில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் காணிகளில் தானியச் செய்கையை ஊக்குவிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது. 

தமது பூர்வீக காணிகளை துப்பரவு செய்துள்ள 25 பயனாளிகள் தானியச் செய்கைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பயறு,சோளன்,கச்சான் ஆகிய தானிய வகைகள் வழங்கப்பட்டது.

இதேவேளை  அம்மக்களின் காணிகளில் அவர்களின் இருப்பை உறுதிப்படுத்தித் தரக்கோரி அரச திணைக்களங்களுக்கும் பரிந்துரை செய்யும் செயற்பாடு திட்டமிடப்பட்டது.

இருந்தபோதிலும் அரசதிணைக்களங்கள் மக்கள் மீளக்குடியேறுவதற்கு எதிர்ப்பாக உள்ளமையால் மக்களாகவே முன் வந்து குடியேறியுள்ளனர்.

இம்மக்கள் மீளக்குடியேறுவதற்கு பக்க பலமாக உள்ள சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பிற்கு நன்றியைத் தெரிவித்ததோடு தமது பூர்வீக காணிகளை இனி எந்த சந்தரப்பத்திலும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பதையும் உறுதியாகக் கூறிக்கொண்டனர். 

இவ்வாறான நிலையில் இதற்கு மறுபுறம் இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகும் நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த நிலை காரணமாக மக்களின் வாழ்க்கை முறையில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ஒரு வேளை உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் மக்கள் பெரும் போராட்டங்களைச் சந்திக்க நேர்ந்துள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் இதுவரை தமக்கான சரியான அரசியல் தீர்வு கிடைக்காத நிலையில் மேலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த நிலைக்கு தற்போதைய பொருளாதார நெருக்கடி ஒரு காரணமாக அமைந்தாலும் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் பல்வேறு தரப்பினரால் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையும் முக்கிய காரணமாகும்.

கிழக்கைப் பொறுத்த வரையில் சுமார் 50000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் அரசு மற்றும் பல்வேறு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் காரணமாக தமக்கான உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 

பல்வேறு வழிகளிலும் மக்களின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்படுமாயின் அவர்களின் வீட்டுத் தேவைக்கான உணவையேனும் உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும் என்பது உறுதியான விடயமாகும். 

இந்த நிலையை எமது அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டியது முக்கிய விடயமாகும். 

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *