அரச வைத்தியசாலைகளுக்கு மேலதிக மருந்துகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை!

கொழும்பு, ஒக்.17

அடுத்த வருடத்திற்கு அரச வைத்தியசாலைகளுக்கு கொள்வனவு செய்யப்படும் மருந்துகளின் தொகையை 25 முதல் 35 வீதத்தால் அதிகரிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி மற்றும் வருமான ஆதாரங்கள் அடைப்பு போன்ற காரணங்களால் கீழ் நடுத்தர வர்க்கத்தினர் தனியார் வைத்தியர்களிடம் செல்லாது அரச வைத்தியசாலைகளுக்கு ஈர்க்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கண்டியில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

நாட்டிற்குத் தேவையான மருந்துப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதில் விசேட கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த மூன்று வருடங்களில் நாட்டில் மருந்து உற்பத்தியை தேவையை 50 சதவீதமாக அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், உள்நாட்டில் தேவைக்கு ஏற்ப தற்போதைய உற்பத்தி 20 சதவீதமாக உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட பணம் இலங்கைக்கு தேவையான மருந்துகளை கொண்டு வர பயன்படுத்தப்படவில்லை என கூறப்படும் சில குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *