
யாழ்ப்பாணம், ஒக்.17
சுயநிர்ணய உரிமையை பயன்படுத்தி சர்வதேச சமூகத்தின் உதவியுடன் வடக்கு கிழக்கில் பொதுசன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வல்வெட்டித்துறையில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
ஜெனிவா கூட்டத்தொடர் முடிவடைந்தும் அது தொடர்பான வாதிப்பிரதிவாதங்கள் இதுவரை முடிந்தபாடாக இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கருத்து கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
ஈழத்தமிழர்களை பொறுத்தமட்டில் பிரதானமான 2 இலக்குகள் இருக்கின்றன.
இனப்படுகொலை உட்பட சர்வதேச குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் நிறுத்தப்பட வேண்டும்.
எமக்கு அரசியல் தீர்வு கிடைக்கப்பெற வேண்டும் என்பதை எதிர்பார்க்கின்றோம். மீள இடம்பெறாத விடயங்களை உறுதிப்படுத்தக்கூடிய விதத்தில் ஒரு சுயநிர்ணய உரிமையை பாவித்து எங்கள் தமிழ் இனம் ஒரு சர்வதேச சமூகத்தின் உதவியுடன் வடக்கு, கிழக்கு மாநிலத்திலே ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிறுத்தி நகர வேண்டிய நிலைமை இருக்கிறது. இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
எதுவுமே இல்லை என்று சொல்லிக்கொண்டு இருக்காமல் ஈழத்தமிழர்க்ள தரப்பிலே நாங்கள் அதை கேட்கக் கூடிய விதத்தில் மாற வேண்டும்.
இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்த சம்மந்தன், சுமந்திரன், சாணக்கியன், கலையரசன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்களாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் இதுவரை பொதுசன வாக்கெடுப்பினை பற்றி கூறாமல் இருக்கிறார்கள். இந்த விடயம் விரைவுபடுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சனைகள் உட்பட அத்தனை பிரச்சனைகளும் சர்வதேச விசாரணைகள் மூலம் இதற்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். இதற்கு ஆதரவாக வாக்களித்த 20 நாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கின்ற அதே நேரத்தில் எதிராக வாக்களித்த 7 நாடுகளுக்கும் எங்களுடைய நியாயங்களை சொல்ல வேண்டிய கடமைப்பாடு இருக்கிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போராட்டங்களில் சிறுவர்களை கேடயங்களாக பயன்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்.
பினிக்ஸ் பறவை போல் சாம்பல் மேட்டில் இருந்து மீள எழுவோம் என்ற தொனிப்பொருளிலே கழுத்துறையில் ஆரம்பித்து தற்போது நாவலப்பிட்டி என்று முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் போன்ற மகிந்த ராஜபக்ஷ அணியினர் புறப்பட்டு இருக்கிறார்கள்.
எங்கள் தமிழ் ஈழம் சுதந்திரம் பெற்ற நாடாக வாழ வேண்டும் என்ற தொனிப்பொருளில் அதை நோக்கி எங்கள் மக்கள் செல்லக்கூடிய விதம் இருக்க வேண்டும். தமிழக தரப்புக்கள் உட்பட அத்தனை தமிழர்களும் நகர வேண்டும் என்பது தான் எங்களுடைய எதிர்பார்ப்பு.
இந்த காடுகளை சீர்படுத்தி, எழில் கொஞ்சும் தேயிலைத் தோட்டங்களையும், இறப்பர் தோட்டங்களையும் அமைத்த மலையக மக்கள் அதேபோன்று, பெருந்தெருக்களையும், புகையிரத வீதிகளையும் அமைக்கப் பயன்படுத்தினார்கள், ஆனால் அவர்கள் பல ஆண்டுகளாக குடியுரிமை இல்லாது இருக்கிறார்கள்.
ஆகவே உடனடியாக அரசாங்கம் மலையக தமிழ் மக்களுடைய வீட்டுப்பிரச்சனை, காணி பிரச்ச்சினைகளுக்கு முடிவுகள் கட்டப்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை அதனை தமிழீழ மக்கள் அனைவரும் ஆதரித்து நிற்போம், அனைத்து வழிகளிலும் உதவி செய்வதற்கு தயாராக இருக்கின்றோம்.- என்றார்.