வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதலை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்!

வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதலை கண்டித்து பிரதேச செயலக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், கவனயீர்ப்பு போராட்டமொன்றையும் மேற்கொண்டிருந்தனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா பிரதேச செயலக வாயிலின் முன்பாக இன்று (திங்கட்கிழமை ) காலை 11.30 மணி தொடக்கம் 12.30 மணி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கந்தபுரம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் கடந்த (புதன்கிழமை) காலை இடம்பெற்ற சமுர்த்தி கொடுப்பனவு தொடர்பான கூட்டத்தின் போது அங்கு சென்ற பொதுமகனொருவர் தனது சமூர்த்தி முத்திரை வெட்டப்பட்டமை தொடர்பில் குறித்த பிரிவு சமூர்த்தி உத்தியோகத்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சமுர்த்தி உத்தியாகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்தில் காயமடைந்த கந்தபுரம் பிரிவு சமூர்த்தி உத்தியோகத்தர் சிவஞானசிங்கம் கபிலன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதல் மேற்கொண்ட பொதுமகனை வவுனியா பண்டாரிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு நீதியான தீர்வு கோரியும் வவுனியா பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கம் மற்றும் பிரதேச செயலகத்தினர் இணைந்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், காலை 11.30 மணி தொடக்கம் 12.30 மணி வரை பணிப்புறக்கணிப்பிலும் பிரதேச செயலக ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டடிருந்தவர்கள் எமது உத்தியோகத்தர்களை நேர்மையாகவும் சரியாகவும் கடமையாற்றுவதற்கு இடையூறு ஏற்படுத்தாதீர்கள் , அரச அதிகாரிகளின் மீதான தாக்குதலை வன்மையான கண்டிக்கின்றோம் , அரசாங்க சுற்றுநிருபத்திற்கினங்க பணிபுரிவதற்கு இடமளியுங்கள் போன்ற வசனங்களை தாங்கிய பாதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *