ஈபிடிபியுடன் முதல்வர் மணி சமரசம் – ஜப்பான் வழங்கிய நிதியை மீளளிக்கவும் தீர்மானம்!

யாழ்.,ஒக் 18
ஜப்பான் நிதி தொடர்பில் நடைபெற்ற சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்து ஈபிடிபியுடன் முதல்வர் மணிவண்ணன் சமரசம் செய்துகொண்டதை அடுத்து ஜப்பன் அரசு வழங்கிய நிதியை மீளளிக்க யாழ் மாநகரசபை தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

கடந்த மாதாந்த அமர்வின்போது யாழ் மாநகர சபையின் ஆட்சியாளர்கள் ஜப்பான் நிதி தொடர்பில் மக்களது நலன்களை கருத்திற்கொள்ளாது தான்தோன்றித்தனமாகவும் சுயநலத்துடனும் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் மேற்கொள்வதாக குற்றம் சாட்டியிருந்த ஈபிடிபி உறுப்பினர்கள் குறித்த சம்பவங்களுக்கு முதல்வர் மன்னிப்பு கோரவேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

ஆனால் அதற்கு முதல்வர் இணக்கம் தெரிவிக்காமையால் குறித்த சபையின் அமர்வை மணிவண்ணன் தரப்பை சார்ந்த உறுப்பினர்களை தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் புறக்கணித்து வெளியேறியிருந்தனர்.

இதனால் சபை நடவடிக்கையும் கோரமின்மையால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

குறித்த விடயம் தொடர்பில் நேற’றைய அமர்விலும் வலுவான வாதப்பிரதிவாதங்கள் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் கள நிலைமையின் பாதக தன்மையை கருத்திற்கொண்ட முதல்வர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களை அழைத்து குறித்த விடயம் தொடர்பில் பேசியிருந்தார்.

இதன்போது ஜப்பான் அரசின் நிதியை பயன்படுத்த முடியாமைக்கும் அது தொடர்பாக கடந்த கூட்டத்தில் விவாதித்த கருத்துக்களுக்கு தான் வருந்துவதாகவும் தெரிவித்திருந்ததுடன் இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்களும் விவாதங்களும் இடம்பெறாத வகையில் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு சபை நடவடிக்கைகள் ஆரம்பமானது.

இதன்போது யாழ் மாநகரசபையின் சுகாதாரதேவைக்கான வாகனக் கொள்வனவுக்காக ஜப்பான் அரசினால் வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்துவதில் சபை தவறிழைத்துள்ளது என்றும் இவ்வாறான தவறுக்கு தான் வருத்தம் தெரிவிப்பதாக முதல்வர் மணிவண்ணன் சபையில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

மேலும் ஜப்பான் நிதியை மீளளிக்குமாறு உள்ளூராட்சி ஆணையாளரால் தமக்கு அறிவுறுத்தப்பட்டதாக குறித்த விடயத்தை சபையில் முதல்வர் மணிவண்ணன் பிரஸ்தாபித்திருந்தார்.

குறித்த விடயம் வெளிநாடுகளுக்கிடையிலான இராஜதந்திர நடைமுறைகளை பாதிக்கும் என்பதுடன் இதை தொடர்ந்தும் பேசுபொருளாக வைத்து சபையில் விவாதித்துக்கொண்டிருக்காமல் முடிவுக்கு கொண்டுவருவது சிறந்ததென மாநகரின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா வலியுறுத்தியிருந்ததுடன் நிதியை மீளளிக்கும் கோரிக்கையை நிறைவேற்றுமாறும் முன்மொழிந்திருந்தார்.

இந்நிலையில் ஜப்பான் அரசு வழங்கிய நிதியை மீளளிக்க சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டு அனுமதியாளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மழைகாலம் ஆரம்பமாகியுள்ளதால் நீர் வடிகாலமைப்பு மற்றும் குளங்களை தூர்வாரி பராமரிப்பது தொடர்பிலும் உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அதற்கான தீர்வை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

மேலும் விளம்பர பலகை பொருத்துவது, நகரப்பகுதி உள்ளிட்ட முக்கியம் வாய்ந்த இடங்களை தூய்மையாக்கும் செயற்பாட்டை தனியாருக்கு கொடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் குறித்த விடயம் தொடர்பில் தற்போது முன்னெடுப்பவர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதற்கும் சபை அனுமதியளித்திருந்தது.

அத்துடன் வீதிகளில் கழிவுகளை கொட்டுபவர்களை இனங்காணும் பொறிமுறை தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் அத்தகைய நபர்காலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு தண்டப்பணம் அறவிடவும் தீர்மானிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *