
பொருளாதார நெருக்கடிக்கு தாம் காரணமில்லை என்பதை காண்பிக்கும் வகையில் ஆளும் தரப்பினர் நாட்டை வலம் வருகிறார்கள்.
கோட்டாபய ராஜபக்ஷ,மஹிந்த ராஜபக்ஷ,பசில் ராஜபக்ஷ,எஸ்.ஆர் ஆட்டிகல,லக்ஷ்மன் மற்றும் கப்ரால் ஆகியோர் பொருளாதார பாதிப்புக்கு முதனிலை பொறுப்புதாரிகள்.
தமது குறைகளை மறைத்து கொள்ள பிறரை விமர்சிப்பது நகைப்புக்குரியதாகும் என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.
கொழும்பில், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
துறைசார் நிபுணர்களின் ஆலோசனையினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பலவீனமடைந்தார் என ஆளும் தரப்பினர்கள் நாட்டை வலம் வந்து குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.நேற்று முன்தினம் நாவலபிடி நகரில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் கட்சி கூட்டத்திலும் இவ்வாறு குறிப்பிடப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் விவசாயத்துறை அமைச்சு பதவி வகித்தவர் தான் கோட்டாபய ராஜபக்ஷவை இரசாயன உரம் மற்றும் சேதன பசளை விவகாரத்தில் தவறாக வழிநடத்தினார்.
இரசாயன உரத்தை தடை செய்து,ஒரே கட்டமாக சேதன பசளை திட்டத்தை செயற்படுத்த முடியாது என விவசாயத்துறை அமைச்சின் செயலாளர்கள் ஆலோசனை வழங்கிய போது விவசாயத்துறை அமைச்சர் அவர்களை பதவி விலக்கி,சேதன பசளை திட்டத்தை முன்னெடுத்து செல்ல முடியும் என ஜனாதிபதிக்கு தவறாக வழிநடத்தினார்.தற்போது இவர் பிறர் ஜனாதிபதியை ஏமாற்றினார்கள் என குறிப்பிடுவது நகைப்புக்குரியது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு விரைவான தீர்வினை காணாவிட்டால் நாட்டு மக்கள் மேலும் மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதை விடுத்து அரசாங்கம் நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் செயற்படுவதை காண முடிகிறது.
வட்டி மற்றும் வரி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.நாட்டில் பெரும்பாலான தொழிற்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தினால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்.
பொருளாதார நெருக்கடிக்கு தாம் காரணமல்ல,பிறர் தான் காரணம் என காண்பிக்கும் வகையில் ஆளும் தரப்பினர் தற்போது நாட்டை வலம் வருகிறர்ர்கள்.ஜனாதிபதி,நிதியமைச்சர்,மத்திய வங்கின் ஆளுநர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர்கள் ஆகியோர் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ,பசில் ராஜபக்ஷ மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான பேராசிரியர் லக்ஷ்மன்,அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்,ஆடிகல ஆகியோர் முதனிலை பொறுப்புக் கூற வேண்டும்.பொறுப்பு கூற வேண்டியவர்கள் அரசியல் இலாபத்துக்காக தப்பித்துக் கொள்வதற்காக பிறரை குற்றஞ்;சாட்டிக் கொள்கிறார்கள் என்றார்.
பிறசெய்திகள்