
முச்சக்கரவண்டி செலுத்தும் சுய தொழிலாளர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு இரு வாரங்களுக்குள் அதிகரிக்கப்படும் என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
சுய தொழிலில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இந்த நடவடிக்கையில் தாமதம் ஏற்படுவதற்கான காரணத்தையும் பாராளுமன்றில் இன்று வினவினார்.
இதற்கு பதிலளித்த எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர,
நீண்டகாலமாக தொழில் ரீதியாக முச்சக்கரவண்டி செலுத்துபவர்களை வகைப்படுத்துவதற்கு சில நாட்கள் தேவைப்படுகிறது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திலுள்ள தரவுகளைக்கொண்டு, இந்த வகைப்படுத்தலை செய்யமுடியாது. அங்கு சுமார் 11 இலட்சம் முச்சக்கரவண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாகாண சபை மற்று உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள தரவுகளுக்கமைய தொழிலில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் தொடர்பான தகவல்கள் உள்ளன. அதற்கமைய, தற்போது, முச்சக்கரவண்டி செலுத்தும் சுய தொழிலாளர்கள் சுமார் 3 இலட்சம் பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கு முன்னரும், வாடகை முச்சக்கரவண்டிகளை உரிய பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கிடைக்கப்பெற்ற தகவல்களை சரிபார்த்து ஒதுக்கீட்டை அதிகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள குறைந்தது இருவாரங்களாவது தேவைப்படும். தற்போது, வாடகை முச்சக்கரவண்டிகள் தொடர்பான தரவுகளை QR இல் உள்ளீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இது நிறைவடைந்த பின்னர் அவர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியும் என்றார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், மூன்று கட்டங்களில் மொத்தமாக 100 ரூபாவினால் பெற்றோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதன் பிரதிபலனை பொதுமக்களுக்கு முச்சக்கரவண்டி சாரதிகள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
பிறசெய்திகள்