ஜெயலலிதா மரணம்: சசிகலா உட்பட 4 பேர் மீது விசாரணைக்குப் பரிந்துரை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பில் சசிகலா உட்பட 4 பேரை விசாரணைக்குட்படுத்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிராகவே விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமிருப்பதாக பலரும் தெரிவித்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின் 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி அளித்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா உட்பட 4 பேரை விசாரணைக்குட்படுத்துவதற்காக விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை.

இந்தச் சிகிச்சையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. ஜெயலலிதாவிற்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்று முறையாக தெரிவிக்கவில்லை.

ஜெயலலிதாவின் தனி மருத்துவர், அவருக்கு உணவு சமைத்து கொடுத்துவர்களின் வாக்குமூலங்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.

ஜெயலலிதா டிசெம்பர் 5ஆம் திகதி இறந்தார் என மருத்துவமனை கூறியிருந்த நிலையில் டிசெம்பர் 4ஆம் திகதியே இறந்தார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *