
கலைகளை வளர்த்துக் கொள்கின்ற அதேவேளை, சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியவர்களாக நாம் மாற வேண்டும் என கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாண பணிப்பாளர் திருமதி சரண்யா சுதர்சன் தெரிவித்தார்.
.கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் இளைஞர் அபிவிருத்தி “அகம்” இணைந்து திருகோணமலை மாவட்ட கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நாடகமும், அரங்காற்றுகைக்குமான போட்டியொன்றை மாவட்ட ரீதியாக நடாத்துவது தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது.இதன் போதே பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள கலைஞர்களின் படைப்புக்களை தேர்ந்தெடுப்பதில் பாரிய சிக்கல்நிலை இருக்கின்றது. ஏனென்றால் போட்டிக்கு வருகின்ற எல்லாப்படைப்புக்களும் திறன்வாய்ந்ததாகவே இருக்கின்றது.
ஆனால், திருகோணமலை மாவட்டத்தில் இந்நிலை இருப்பதில்லை. அவர்களின் படைப்புக்கள் மிகக் குறைவாகவே போட்டிக்கு கிடைக்கிறது.
எமது கலைகளை வளர்த்துக்கொள்கின்ற அதேவேளை, எமது படைப்புக்கள் மூலம் சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதாகவும், நன்மைகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.
சமூக உரிமை, பால்நிலை சமத்துவத்துடன் கூடிய இளைஞர்களின் பங்களிப்புக்கள், பிள்ளைகளின் நலனில் இளையோரின் பங்களிப்புகள் எவ்வாறு அமையவேண்டும், கிராமிய வாழ்க்கை முறையுடன் சமூக அபிவிருத்தி பற்றிய தகவல்கள், இயற்கை வளங்களை பாதுகாப்பது தொடர்பான விடயங்கள், பெரியோர்கள் வழிகாட்டலால் இளைஞர்களின் வளர்ச்சி, சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்திகள் போன்ற விழிப்புணர்வு விடயங்களை கருப்பொருளாகக் கொண்டு உங்களின் படைப்புக்கள் இடம்பெறுமாக இருந்தால் அதில் பல நன்மைகளுண்டு.
மேலும், சமூகங்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வு, இளவயது திருமணம், போதைப்பொருள் பாவனை, பாலியல் துஸ்பிரயோகம், இனரீதியான மோதல்கள், மொழி தொடர்பான அறிவின்மை, வேலைவாய்ப்பின்மை, பாடசாலை இடைவிலகல், பொருளாதார நெருக்கடி, அதிகரித்த தொலைபேசிப் பாவனை போன்ற பல்வேறு பிரச்சினைகள் இன்று இளைஞர்கள் மத்தில் காணப்படுகின்றது.
இதனால் இன்றைய இளம் சந்ததியினர் சமூகச் சீர்கேட்டிற்கு ஆளாகிச் செல்வதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனை முன்வைத்து உங்களின் படைப்புக்கள் அமையவேண்டும்.
மேலும் குறித்த நிகழ்வில் இளைஞர் அபிவிருத்தி “அகம்” நிறுவனத்தின் இணைப்பாளர் பொ.சற்சிவானந்தம், சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர்களான க.அன்பலகன், வீ.கோணஸ்வரன், வி.குணபாலா மற்றும் திருகோணமலை மாவட்ட கலைஞர்கள் பலர் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்