நாயின் செயலால் குடும்பத்துக்கு கிடைத்த பெருமை

கண்டி,ஒக் 18

வீட்டில் வளர்க்கும் நாயொன்று செய்த நல்ல செயலால் அந்த குடும்பமே குதூகலித்த சம்பவமொன்று கண்டி அலதெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

வீட்டுக்கு வெளியே கடந்த 15ஆம் திகதியன்று இரவு​வேளையில் வெளியே சென்றிருந்த அந்த நாய், கடையொன்றுக்கு முன்பாகவுள்ள வீதியில் விழுந்துகிடந்த பணப்பையை கௌவிக்கொண்டுவந்து, தன்னுடைய கூடாரத்துக்கு அருகில் போட்டுவிட்டுள்ளது.

பாதணிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களையும் கடிக்கும் அந்த நாய், அந்த பணப்பையை மட்டும் கடித்து சேதப்படுத்தாது, முன்னங்கால்கள் இரண்டிலும் அழுத்தி பிடித்துக்கொண்டிருந்துள்ளது.

எனினும், வீட்டின் உரிமையாளர்கள் அந்த பையை நாயிடமிருந்து மீட்டெடுத்து, அதனை திறந்து பார்த்துள்ளனர். அதில், 7ஆயிரம் ரூபாய் பணமும் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் பெறுமதியான தங்கச் சங்கிலியும் இருந்துள்ளது.

அத்துடன் அந்த பணப்பையில் இருந்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்ட வீட்டு உரிமையாளர்கள், உரிமையாளரை வீட்டுக்கு அழைத்து அந்தப் பணப்பையை கையளித்துள்ளனர்.

இதுதொடர்பில் அலதெனிய பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.

பொலிஸாருடன் வீட்டுக்கு வந்த பணப்பையின் உரிமையாளர் அதனை பெற்றுச்சென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *